ஹம்துன் அஷ்ரப்

26 ஆக., 2012

புதுச்சத்திரம் அருகே நேற்று காலை எல்.கே.ஜி. மாணவி கார் மோதி மரணம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012 No comments


கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தாள். இன்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கத்தில் பள்ளி வேனுக்காக மற்ற மாணவிகளுடன் காத்து நின்றாள்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் நிலை தடுமாறி தாறுமாறாக ரோட்டில் ஓடியது. அதைப்பார்த்து மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். ஆனால் மாணவி செவ்விழி மீது அந்த கார் மோதியது. இதில் அவள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது . உடனே கார் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. செவ்விழி இறந்த தகவல் அறிந்து அவளது பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர். பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மகள் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

இது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் பற்றி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் பிணம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். அப்போது சிறுமியின் தலை அசைந்ததாகவும் அவள் உயிரோடு இருக்கிறாள் பரிசோதிக்க வேண்டும் என்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுமியை காப்பாற்று... காப்பாற்று... என்று இறைவனிடம் வேண்டினார்கள். உடனே அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள்  சிறுமியின் உடலை பரிசோதனை செய்தனர். சிறுமி இறந்து விட்டாள் என்று உறவினர்களிடம் நர்சுகள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வேதனையோடு பிணவறையை விட்டு வெளியே சென்று கண்ணீர் விட்டு கதறினார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி மீது மோதிவிட்டு சென்ற காரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்: