ஹம்துன் அஷ்ரப்

3 நவ., 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 3% பேர் மட்டுமே தேர்ச்சி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 03, 2012 No comments

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர் மட்டுமே,அதாவது 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

முதல் தாளை எழுதிய
 2 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேரில் 10,397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேரில் 8,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் தாளில் 3.7 சதவீதம் பேரும், இரண்டாம் தாளில் 2.3 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழகம் முழுவதும் சுமார் 7,500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதால்,முதல் தாளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் 20,525 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய தகுதிகளுடன் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.7 லட்சம் பேர் எழுதினர். இதில் 2,448 பேர் மட்டுமே (0.36%) தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காகவும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடத்தப்பட்டது.

மறுதேர்வில் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முறை சுமார் 17 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 2,246 பேர் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் முதலில் பணி நியமனம் வழங்கப்படும்.

அதன் பிறகே ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

நவம்பர் 6-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றிபெற்ற 19,246 பேருக்கும் நவம்பர் 6-ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

ஒவ்வொரு தேர்வருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம்,இடம் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படாது.

ஒவ்வொரு தேர்வரும் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களையும்,அவற்றின் இரண்டு நகல்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவர வேண்டும்.

முதல் தாளில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது, அசல் சான்றிதழ்களுடன் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட பதிவு சான்றிதழின் இரு நகல்கள் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.

இது தொடர்பாக, வேலைவாய்ப்பு இயக்குநரகம் உரிய உத்தரவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் அடுத்த தேர்வு

அடுத்ததாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம் உள்ளிட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ள உள்ளது.

அதன்பிறகு,ஆசிரியர் தேர்வு வாரியத்தை புதுப்பித்து ஆன்-லைன் வழி விண்ணப்பம் உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, வரும் ஜூன் மாதத்தில்தான் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் தவறுகள்

ஆசிரியர் தகுதி மறுதேர்விலும் விடைத்தாளில் தேர்வர்கள் பல்வேறு தவறுகளைச் செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நன்றி;http://news.vikatan.com/

0 கருத்துகள்: