ஹம்துன் அஷ்ரப்

16 டிச., 2010

திருமாவளவன் கோரிக்கை

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், டிசம்பர் 16, 2010 No comments

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டதில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலோடு இவ்வாறு விலை உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் இந்திய அரசே பெட்ரோல் விலை வரையறைகளைத் தீர்மானித்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக, அந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அளித்து விட்டதனால், அந்நிறுவனங்களே விலை உயர்வைத் தீர்மானித்து, அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கு பெட்ரோலிய அமைச்சகத்தின் அனுமதி பெற்று அறிவிக்கும் ஒரு ஏற்பாட்டை வைத்துள்ளனர்.

விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கும் இந்திய அரசின் இத்தகைய கொள்கை முடிவு வெகுமக்களுக்கு எதிரான முடிவேயாகும்.

இந்திய அரசின் இந்த முடிவால், ஏழை- எளிய உழைக்கும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு இம்முடிவை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலையை எட்டாவது முறையாக தற்போது உயர்த்தியுள்ள முடிவையும் உடனே திரும்பப் பெற இந்திய அரசு ஆணையிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் அரசால் மட்டுமே குடிமக்களைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்தும் வறுமைக் கொடுமைகளிலிருந்தும் ஓரளவேனும் பாதுகாத்திட இயலும்.

எனவே, பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் இந்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுடன், அவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றி:இந்நேரம்.காம்

0 கருத்துகள்: